
சுவரின்றிச் சித்திரமேது நண்பா!
நண்பர்களே, என் உறவுகளே, இலங்கை வாழ் நம் சொந்தங்களுக்கு ஏற்படும் இன்னல்களைக் கண்டு நாம் அனைவரும் மீளா துயரத்தில் ஆழ்ந்து உள்ளோம். ஈழத்தமிழர்களைக் காக்க நெருப்பில் தங்களை கருக்கிக் கொண்டனர் பலர். தமிழகம் மட்டுமல்லாமல் ஜெனிவா, மலேசியா என்று உலகம் எங்கும் இது தொடர்கிறது. தயவுச்செய்து இனி எவரும் உங்கள் உணர்ச்சிகளை வெளிக்காட்ட இவ்வழியை தேர்ந்தேடுக்காதீர். உங்கள் உயிர் தியாகத்தால் ஏற்பட்ட நன்மைகள் தான் என்ன?
1). உங்கள் குடும்பத்தினர் உங்கள் இழப்பால் இடிந்து போகின்றனர். 2). உங்கள் குழந்தைகள் தங்கள் மீது அன்பு செலுத்த, பாசத்துடன் ஆதரவு தர இருந்த ஆத்மாவை இனி அவர்கள் வாழ்க்கையில் இல்லாமல் செய்து, நீங்களே அவர்களை வஞ்சிக்கிறீர்கள். 3). உங்கள் துணைவியை தனி மரமாக்கி, உங்கள் குழந்தைகளை முன்னேற்ற பிறர் உதவியை எதிர்ப்பார்க்க செய்க்கிறீர்கள். 4). உங்கள் பெற்றோர் கடைசிக் காலத்தில் தம்மைக் கவனித்து கொள்வான் என்ற நம்பிக்கையை குழித் தோண்டி புதைப்பது மட்டுமல்லாமல் அவர்களின் மீதம் உள்ள வாழ்க்கையை நரகமாக்கி விடுக்கிறீர்கள். 5). உங்கள் இறப்பால் இலங்கை பிரச்சனையில் தீர்வு ஏற்ப்பட்டதா ? 6). இவை அனைத்துக்கும் மேலாக உங்கள் தியாகம் அரசியலாக்க படுக்கின்றது.

நம் சொந்தங்களின் உயிரை இலங்கைப் போர் என்ற தீக்கு இரையாவதை தடுக்க நாம் முயற்சிக்கிறோம், அந்த காட்டுத்தீயை எதிர்த்து இங்கு உள்ள நம் சொந்தங்கள் தீயில் தம்மைத்தாமே கருக்கிக் கொள்வது எவ்வகையில் நியாயம்? அங்கு உள்ள நம் சொந்தங்கள் யாரும் இதை உங்களிடம் இருந்து எதிர்ப்பார்க்க வில்லை, எதிர்ப்பர்க்கவும் மாட்டார்கள் என்பதில் சிறிதளவும் சந்தேகம் வேண்டாம். .
நம்மில் பலர் இதுபோன்றச் செயல்களில், இன்னும் தங்களை கருக்கிக் கொள்ள முற்படுக்கின்றனர். உங்கள் தியாக எண்ணத்தில் நான் தவறு கண்டுபிடிக்கவில்லை. ஆனால் உங்கள் போராட்ட வழியை தான் மாற்றம் வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கின்றோம். "ஒருவன் தன் கோடாரியை விழுங்கப்போவதாகச் சொன்னால் நீ அதன் காம்பைப்பிடித்துக்கொண்டு அவனுக்கு உதவி செய்" என்பது நமது முன்னோர் வாக்கு. நீங்கள் இன்னுயிர் துறப்பதால் நம் தமிழினத்தையே இல்லாமல் செய்ய வேண்டும் என்று நினைத்து செயல்படும் கூட்டத்திற்கு மட்டுமே ஆனந்தம்.
நமது கையில் காயம் ஏற்பட்டால், அதற்க்காக ஒரு கத்தியை எடுத்து நம் கையை அறுத்து கொள்கிறோமா என்ன? வாழ்க்கை என்பது போர்க்களம், அதில் போராடி ஜெயிப்பதே வாழ்க்கையின் நோக்கம். எப்படிப்பட்ட குழப்பமான சூழ்நிலைகளிலும் தெளிந்த நீர் ஓடை போல் உங்கள் மனம் செயலாற்ற வேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கை.
நீங்கள் ஒரு நிமிடத்தில் செய்யும் இந்த காரியத்திற்க்கு தாங்கள் பொறுப்பில்லை என்று இந்த அரசாங்கம் இரண்டே வார்த்தையில் சிறிதும் இரக்கம் இல்லாமல் முடித்து விடும். இதுவே நீங்கள் உண்ணாவிரதம் இருக்கும் பட்ச்சத்தில் உங்கள் உயிர்க்கு இந்த அரசாங்கம் தான் பொறுப்பு. உங்களை ஒருவேளை இந்த மண்ணுக்கு இரையாக விட்டால் அதன் பிறகு அவர்கள் ஒரு நாளும் இந்த நாட்டை ஆட்சி செய்ய கனவுக்கூட காண முடியாது. இதை போன்று பல்வேறு போராட்ட வழி உள்ளது என்பதற்க்காக இது ஒரு எடுத்துக்காட்டே ஆகும்.
எங்காவது தலைவர்கள் தீக்குளித்து பார்த்து இருக்கிறார்களா?. நீ தொண்டனாக இருந்து உன் தலைவனுக்கு தொண்டாற்றியது போதும், விழித்திடு தலைவனாக மாறி உன் மக்களுக்கு தொண்டாற்று. இந்த அரசாங்கத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் துருப்புச்சிட்டு நமது கையில் உள்ளது. தமிழராகிய நாம் சாதிக்க பிறந்தவர்களே தவிர, சாவதற்கு பிறந்தவர்கள் அல்ல என்பதை மனதில் கொள்ள வேண்டும். "நம்பிக்கையுள்ளவர்களுக்கு கதவுகள் மூடிக்கொண்டாலும் ஜன்னல்கள் வழிகாட்டும்" என்பது பழமொழி. இந்த நம்பிக்கையுடன் போராடும் நம் இலங்கை வாழ் தமிழர்க்கு உன் தோழைக் கொடு, உன் உயிரை அல்ல.