Friday, February 27, 2009

காஷ்மீர் ஆயுதப்போராட்டமும், இலங்கைப் போரும் வேறுபட்டதா?

நம்மிடத்தில் அமைதி இல்லாமல் போனால் அதற்கு காரணம், நாம் ஒருவர்க்கு ஒருவர் சொந்தம் என்பதை மறந்ததால் மட்டுமே. - அன்னை தெரசா.

இலங்கையில் அந்நாட்டு அரசு போர் நிறுத்தம் செய்யாமல், தொடர்ந்து தாக்குதல் நடத்துவதைப் பற்றி நம் இந்திய மற்றும் பல நாடுகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள் முதல் சாதரண பொதுமக்கள் வரை இரண்டு வகையானக் கருத்துக்கள் நிலவுகிறது. சிலர் வரவேற்றும், சிலர் எதுர்த்தும் குரல் கொடுக்கின்றனர். அதில் இலங்கை அரசின் ராணுவ நடவடிக்கை தவறில்லை என்பது மட்டுமின்றி, காஷ்மீர் தனிநாடு கேட்டு போராடுபவர்களை எதிர்த்து நமது இராணுவம் போராடுவதை போல், இலங்கை ராணுவமும் போரிடுகிறது என்று கூறுபவர்களுடைய கருத்தில் உள்ள நியாய, அநியாங்களைப் பற்றி நாம் இப்பொழுது அலசி ஆராய்வோம்.

காஷ்மீர் தனிநாடு கேட்டு ஆயுதம் ஏந்தியவர்களை நம் அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்குவது தவறா?. நூற்றுக்கு நூறு இதில் தவறு ஏதும் இல்லை என்று தீவிரவாதிகள் மூலம் மூளைச்சலவைச் செய்யப்படாத எந்த ஒரு இந்திய குடிமகனின் பதிலாக மட்டுமின்றி இந்த உலகில் வாழும் நல்ல இதயம் படைத்த மக்களின் கருத்தாக இருக்கும். இதேப் போன்ற ஒரு அணுகுமுறையை தானே இலங்கை அரசும் மேற்கொள்கிறது. இதை நாங்கள் ஆதரிப்பது தவறா?. இது தான் அவர்கள் கேள்வி.

இலங்கைப் போர் என்ற இந்த விதை இலங்கை சுதந்திரம் அடைந்த பொழுதே விதைக்கப்பட்டது. இலங்கை சொந்தமண்ணாக கொண்ட தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தியது, தனிச் சிங்களச் சட்டம்(தற்ப்போது இதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது), பெளத்தம் அரச சமயம் ஆக முதன்மைப்படுத்தப்படல் போன்ற பல்வேறு இனப்பாகுபாட்டினை தூண்டும் செயல்கள், அந்த விதை இன்று ஆலமரமாக எழும்ப காரணமாகி விட்டன.


காஷ்மீர் போராட்டமும் இந்தியா சுதந்திரம் அடைந்த பொழுதே ஆரம்பித்தது தான் என்றாலும், இந்தியா அங்கு அமைதி ஏற்படுத்தி, மக்கள் வாழ்க்கைத் தரம் முன்னேற பல முயற்ச்சிகள் மேற்கொண்டு உள்ளது. அங்கு மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் தீய சக்திகளை எதிராக இந்தியா போராடி வருகிறது. இந்திய அரசியல் சாசனத்தின் 370ஆம் பிரிவின்படி, ஜம்மு-காஷ்மீருக்குத் தன்னாட்சி உரிமையும் சிறப்பு அந்தஸ்தும் வழங்கப்பட்டன. 2007ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் தேதி பிரான்சில் நடைப்பெற்ற ஐரோப்பிய மக்கள் பிரதிநிதிகள் சபை கூட்டத்தில், அதன் பிரிட்டிஷ் பிரதிநிதியான எம்மா நிக்கல்சன் காஷ்மிரின் இரு பகுதிகளிலும் (பாகிஸ்தானிய ஆக்கிரமிப்பு காஷ்மீர் உட்ப்பட)சுற்றுப்பயணம் மேற்கொண்டு தாக்கல் செய்திருந்த அறிக்கை பெருவாரியான பிரதிநிதிகளின் ஆதரவுடன் நிறைவேற்றியது.அதில் உள்ள சில முக்கிய கருத்துகள் இதோ "பாகிஸ்தானிய ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ளதை விட அனைத்து விதங்களிலும் இந்திய காஷ்மீரில் மனித உரிமைகளும், மக்கள் வாழ்க்கை தரமும் அவர்களுக்கு அளிக்கப்படும் அடிப்படை உரிமைகளும் நன்றாக உள்ளது. பாகிஸ்தானிய ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மனித உரிமைகளே இல்லை.அவர்கள் சமமான குடிமக்களாக நடத்தப்படுவதில்லை. ஜனநாயகமும் இல்லை. பாகிஸ்தானிய பாராளுமன்றத்தில் அவர்களுக்கு பிரதிநிதித்துவமும் இல்லை."


இலங்கையில் மக்கள் சம உரிமைக் கோரி அறவழியில் போராடிய போது அரசு பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டு அறப்போராட்டத்தை ஒடுக்கியது. அதில் பலியானோர் எண்ணிக்கை பல்லாயிரம். தங்கள் சுயமரியாதை பாதிக்கப்பட்டு, எண்ணற்ற தங்கள் சொந்தங்கள் இறப்பதைக் கண்டு ஆயுதம் ஏந்தி போராட ஆரம்பித்தனர். அவர்களை ஒடுக்குவதாகக் கூறி விமானப்படைத் தாக்குதல் சிங்கள ராணுவத்தினர் நடத்தினர், நடத்திக் கொண்டும் இருக்கின்றனர். இதில் அங்கு வாழும் அப்பாவி மக்கள் பெருமளவில் மடிவார்கள் என்று இவர்களுக்கு தெரியாதா? அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாப்பு மண்டல பகுதியில் தங்கியிருந்த அப்பாவி தமிழர்கள் மீது சிங்கள ராணுவத்தினர் தொடர்ந்து சரமாரியாக பீரங்கி மற்றும் ஏவுகனை தாக்குதல் நடத்தியது எவ்வகையில் சரி? யுத்தத்தில் கடைபிடிக்க வேண்டிய அடிப்படை நியதிகளைக் கூட காற்றில் பறக்க விட்டு, மருத்துவமனைகள், பள்ளிக் கூடங்கள், சிறார் இல்லங்கள், குடியிருப்புகள் என குண்டுவீசி தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்தியா, காஷ்மீரில் தீவிரவாதிகளை அடக்குவதாகக் கூறி என்றைக்கும் விமானப்படைத் தாக்குதல் நடத்தியது இல்லை.


மேலே குறிப்பிட்டதுப் போல், நமது இந்திய அரசு தீவிரவாதத்தைய இரும்புக்கரம் கொண்டு அடக்க முனைவது உண்மை எனினும், நம் நாட்டில் எவரையும் இன ரீதியாக ஒடுக்க தற்சமயம் இந்தியாவை ஆண்ட எந்த அரசும் முனையவில்லை. இதற்கு சான்றாக நமது இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் 2008 அக்டோபர் 13ஆம் தேதி புதுடில்லியில் நடைப்பெற்ற தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டத்தில் பேசியதின் சில கருத்துகள் இதோ "மதத்தின் பெயரில் கலவரங்களை, வன்முறைகளை தூண்டி விடுபவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். அதேநேரத்தில் இரு தரப்புக்கும் இடையே நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டும். தீவிரவாதம் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும். இதில் சமரசத்துக்கே இடமில்லை. அதேநேரத்தில் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் தவறான முறைகளைப் பின்பற்றக் கூடாது. குறிப்பிட்ட ஒரு சமூகத்துக்கு எதிரான நடவடிக்கையாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிரான எண்ணத்தையோ ஏற்படுத்துவதாக அமைந்துவிடக் கூடாது" என்றார்.


இவை அனைத்துக்கும் மேலாக இந்தியாவில் வாழும் நாம் அனைவரும் காஷ்மீர் மக்களை நம்மில் ஒருவராக தான் பார்க்கின்றோம். ஆனால் இலங்கை வாழும் தமிழர்களை பிறநாட்டைய சேர்ந்தவர்களைப் போல் பாவிக்கின்றனர். சிலர் அவர்களை மனிதர்களாகக் கூட மதிப்பது இல்லை.


இலங்கை தமிழர் பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு சரியாகாது என்பது தான் நம் அனைவருடைய கருத்தும். அரசியல் தீர்வு மட்டுமே இலங்கை வாழ் தமிழ் மக்களின் உயிரையும், உரிமையும் பாதுக்காக்க முடியும். இலங்கையில் தமிழர்களுக்கு சம அந்தஸ்து, சம உரிமை, சம வாய்ப்பு என்ற நமது ஆசை வெறும் பகல்கனவாக இருந்துவிடாமல் நிறைவேறி அங்கு கூடியவிரைவில் அமைதி திரும்ப நம்மால் முடிந்த எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வோமாக.


கடந்த தேர்தலை விட மக்கள் கணிசமான அளவில் வாக்களித்து காஷ்மீரில் புதிதாக அமைந்துள்ள அரசு, இந்தியாவின் பிறப்பகுதிகளில் உள்ளது போலான வாழ்கை முறையினை அங்கு கொண்டு வரவேண்டும். அதற்கு தேவையான அடிப்படை வசதி, வேலைவாய்ப்பு, கல்வி முதலியப்பற்றில் கவனம் செலுத்தி, ஊரடங்கு உத்தரவு, குடியிருப்புப் பகுதிகளைச் சுற்றி வளைத்துத் தாக்குவது, சோதனைச் சாவடிகள் போன்றவற்றை குறைத்து, ''ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்'' முழுமையாக நீக்கப்பட்டு மக்கள் நிம்மதியாக வாழ வைக்க வேண்டும். இதன் முலம் காஷ்மீர் மக்களின் நம்பிக்கைப் பெற்று, அவர்களை உணர்வுபூர்வமாக தீவிரவாதிகளை எதிர்க்க வைத்தால் மட்டுமே, நாட்டின் மத நல்லிணக்கம், ஒருமைப்பாடு மற்றும் அமைதிக்கு ஊறு விளைவிக்கும் பயங்கரவாத மற்றும் பிரிவினைவாத அமைப்புகளை முழுமையாக ஒடுக்க இயலும்.


காஷ்மீர் ஆயுதப்போராட்டமும், இலங்கைப் போரும் வேறுபட்டதா? என்ற கேள்விக்கான விடையை இப்பொழுது நீங்களே இந்த இடுகையின் பின்னோட்டத்தில் கூறுங்கள்.

Saturday, February 21, 2009

மத்திய அரசுக்கு ஒரு யோசனை - இலங்கை பிரச்சனையில் இந்தியா என்ன செய்ய இயலும்?

நாடாளுமன்றத்தில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப்முகர்ஜி, 'போரை நிறுத்தச் சொல்லி இலங்கையை இதற்கு மேல் நம்மால் வற்புறுத்த முடியாது. காரணம், பிறநாட்டுப் பிரச்னையில் ஓரளவுக்கு மேல் நம்மால் தலையிடமுடியாது' என்று கூறியுள்ளார். இந்தியா இறையான்மை என்று சொல்லிக் கொண்டு இனியும் அமைதி காத்தால், பல்லாயிரம் அப்பாவி மக்கள் இறப்பதற்கு நாமும் ஒரு முக்கியக் காரணமாகி விடுவோம். உலக நாடுகளுக்கு முன்னுதாராணமாக சில நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

இலங்கை அரசுக்கு ராணுவ உதவி வழங்கும் நாடுகளில் முதல் இடம் யார் பெறுவார்கள்? நாம் தானே. உதவிச் செய்ய என்ன காரணம் கூறுகிறோம்?. அந்த ராஜதந்திரக் காரணம் என்னவாக இருந்தாலும் சரி, அதை நாம் சிறிது புறம் தள்ளிவிட்டு இக்கனத்தில் இருந்தாவது ராணுவ உதவி வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும். எங்கள் வரிப்பணத்தால் எந்த ஒரு அப்பாவி உயிரும் இனியாவது பலியாகாமல் காத்திடுங்கள்.

போர் நிறுத்தம் உடனடியாக அமல்படுத்த இலங்கை அரசை வலியுறத்த வேண்டும். அதை இலங்கை அரசு நிறைவேற்றாதப் பச்சத்தில் பொருளாதார தடைகள் விதிக்க வேண்டும்.


ஐக்கிய நாடுகள் சபையை உடனடியாக கூட்ட முயற்சிக்க வேண்டும். அனைத்து நாடுகளையும் மேற்குறிய இரண்டுச் செயல்களையும் செய்ய வலியுறத்த வேண்டும்.


நான் எதுவும் புதிதாக கூறவில்லை, என்னை போன்ற கோடிக்கணக்கான மக்களின் கருத்து தான் இவை அனைத்தும். இவை தமிழக மக்களின் எண்ணம் மட்டும் அல்ல. இந்தியராக பிறந்த அனைவருடையதும். ஏனெனில் நாங்கள் அனைவரும் வேற்றுமையில் ஒற்றுமை என்னும் தாரக மந்திரத்தில் நம்பிகை உள்ளவர்கள். இந்திய நாட்டில் வாழும் சாதரண குடிமக்களாகிய எங்களுக்கே இவை தெரிகிறது என்றால் இந்த நாட்டை ஆளும் உங்களுக்கு தெரியாமலா இருக்கும். தயவு செய்து மீதம் உள்ள எம் மக்களையாவது காப்பாற்றுங்கள்.

Sunday, February 15, 2009

எம் மக்களை உயிரோடு விடுங்கள் - உலக தலைவர்களுக்கு பகிரங்க கோரிக்கை


உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகும் முதல் உணர்வு, இந்த பரந்து விரிந்த உலகத்தில் வாழும் பல்லாயிரம் மக்களுடன் சம்மந்தப்பட்டது என்பதை விட என் சக தமிழனுடன் சம்மந்தப்பட்டது என்பது என்னை இன்னும் கடும் துயரத்தில் ஆழ்த்துகிறது. எல்லா மக்களும் ஒன்று தான், ஏன் இந்தப் பாகுபாடு என்று உங்களுக்குத் தோன்றலாம் ?. உங்களுக்கு தொடர்பு இல்லாத எவரோ ஒருவர் அகலாமரணம் அடையும் பொழுது உங்களக்கு ஏற்படும் துயரத்தை விட உங்கள் ரத்த சொந்தத்தில் நடக்கும் பொழுது ஏற்படும் துயரம் அதிகம்.


இலங்கை உள்நாட்டுப் போரால் தினமும் இலங்கை ராணுவத்தினரும், விடுதலைப்புலிகள் மட்டுமல்ல பல நூறு அப்பாவி மக்களும் உயிரிழக்கின்றனர் . விடுதலைப்புலிகள் ஆதரவு, எதிர்ப்பு என்பதற்கு அப்பால் இலங்கையில் வாடும் அப்பாவி மக்களைப் பற்றி இவ்வுலகம் சிந்திக்க வேண்டும் என்பது தான் என் கோரிக்கை.


ராஜீவ் காந்தியை படுகொலை செய்தனர் என்று விடுதலைப்புலிகள் மீது குற்றச்சாட்டு உள்ளது. நன்று, அதில் சம்மந்தப்பட்டவர்களை கண்டுப்பிடித்து தண்டனையை தாருங்கள், வேண்டாம் என்று நான் ஒருபொழுதும் சொல்ல மாட்டேன். ஆனால் ஒன்றும் அறியாத மக்கள் செத்து மடிவதற்கு காரணமான இப்போரை நிறுத்த இந்தியா மட்டும் அல்லாமல் அனைத்து உலக நாடுகளும் தீவிரமாக ஏன் முனையவில்லை என்பது தான் என் ஆதங்கம்.


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப் பட்ட நளினியின் தண்டனையை குறைக்க திருமதி.சோனியா காந்தி அவர்கள் பரிந்துரை செய்தது கருணையின் வெளிப்பாற்றுக்கு சிறந்த எடுத்துகாட்டு. அதே போன்ற ஒரு கருணையை மீண்டும் ஒரு முறை அவர்களிடம் இருந்து எதிர்ப்பார்க்கிறோம்.அனைத்து கட்சி தமிழக தலைவர்கள் மட்டுமின்றி இந்திய தலைவர்களுக்கும் கோரிக்கை வைக்கின்றோம், உங்கள் அரசியல் லாப நஷ்ட கணக்குகளை சிறிது புறம் தள்ளிவிட்டு ஒரு அணியில் திரண்டு மீதமுள்ள எம் சகோதர மக்களின் உயிரையாவது காக்க குரல் கொடுப்பதோடு நிறுத்தி கொள்ளாமல் ஆவணம் செய்ய வேண்டும்.


இதில் இந்தியா உட்ப்பட உலக நாடுகள் என்ன செய்ய இயலும் என்று அடுத்த கேள்வி எழலாம்?. இப்போர் நடைபெற முக்கிய காரணம் என்ன என்று அலசினோம் என்றால் நமக்கு கிடைக்கும் ஒரே பதில் இனபாகுபாடு மற்றும் அதை மெருகூட்டும் இனப்பாகுபாட்டு சட்டங்களும் தான். எனவெ இது போன்று நடைபெறாமல் தடுத்து, நடைபெற்றதால் ஏற்பட்ட இன்னல்களைப் போக்கி இலங்கையில் அமைதி திரும்ப வழி செய்ய வேண்டும். உடனடியாக போர் நிறுத்தம் ஏற்படுத்தி மீதம் இருக்கும் எம் மக்களையாவது காக்க வேண்டும் என்று இவ்வுலக தலைவர்களை இரு கரம் குப்பி கேட்டுக் கொள்கிறேன்.
உங்களால் முடியும் துணிந்து முயற்சி செய்யுங்கள் உலக மக்கள் அனைவரும் உங்களுடன் துணை நிற்பர். வாழ்க உலக சமுதாயம். வளர்க உலக அமைதி.



Friday, February 13, 2009

முதல் கிறுக்கல்

என் மனதில் தோன்றியதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள எண்ணம் கொண்ட பொழுது எனக்கு கிடைத்த புதையல் தான் இந்த வலைபதிவு . இது மற்ற புதையலை காட்டிலும் மாறுபட்டது. எப்படி என்று வினவ தோன்று கிறதா ?. இந்த புதையல் எல்லோருக்கும் ஒரே பொருளை தராது. சிலருக்கு இந்த வலைபதிவில் உள்ளது செல்லா காசாக தோன்றும். சிலருக்கு தங்க காசாக தெரியலாம். என்னால் இயன்றவரை உங்களுக்கு பயனுள்ளதாக மற்றும் உங்கள் பாராட்டு பெரும்படியான எனது படைப்புகளை மட்டும் இங்கு சமர்பிக்கிறேன். நன்றி.