Tuesday, March 30, 2010

முதன் முறையாய் நண்பனுக்கு

சென்ற ஆண்டில் கடவுள் எனக்கு அளித்த விலைமதிப்பில்லா இரு நண்பர்களின் ஒருவனுக்கு இன்று பிறந்தநாள். இது அவனுக்காக

இனிய நண்பா,

ஒவ்வொரு பிறந்தநாளிலும் உன்னை வாழ்த்துபவர் பலர்,
இனி அவர்களில் நானும் ஒருவன்.
வாழ்க்கை முழுவதும் உன்னுடன் பழகிய நினைவுகளை சுமந்திடுவர் சிலர்,
இனி அவர்களில் நானும் ஒருவன்.

அன்பு தோழா,

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
என்றும் இன்று போல்,
புன்னகையுடன் உன் வாழ்க்கை அமைய மனமார இறைவனை வேண்டிகொள்கிறேன்.
என்றும் இன்று போல்,
நம் இருவருக்கும் இடையே உள்ள நட்பு இம்மி அளவும் குறையாமல் வாழ்க்கை முழுவதும் தொடர இறைவனை பிராத்திக்கிறேன்.

Monday, March 8, 2010

100 வது உலக மகளிர் தின சிறப்பு இடுகை

இந்த உலகின் படைக்கும் கடவுள் பிரும்மா என்கிறது இந்து மதம். அது உண்மையா பொய்யா என்ற ஆராய்ச்சி நமக்கு இப்பொழுது வேண்டாம். ஆனால் ஆணோ, பெண்ணோ நம்மை இவ்வுலகுக்கு கொண்டு வர தங்கள் உயிரையே பணையம் வைக்கிறார்களே நம் நிஜ பிரம்மாக்கள் அவர்களுக்கு என் உள்ளம் கனிந்த மகளிர் தின வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்.
தாய்மாருகளுக்கு மட்டும் தான் நான் வாழ்த்து தெரிவித்துள்ளேன் என்று தவறாக புரிந்து கொள்ளவேண்டாம். ஆண்களை காட்டிலும் பெண்களை உயர்த்தி காட்டும் தகுதிகளில் முதன்மையானத்தை தான் மேலே குறிப்பிட்டேன். "மகளிராய் பிறப்பதற்கு மாதவம் செய்திடல் வேண்டும்" என்று பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் ஒளவை பெருந்தகை பாடியதை விட என்ன சான்று வேண்டும் பெண்களின் சிறப்பை எடுத்துரைக்க.
தாய்நாடு, தாய்மொழி இன்று எல்லாவற்றிலும் பெண்ணை, நம் முன்னோர் முதன்மை படுத்தியதில் இருந்து ஆதிக் காலத்தில் பெண்களுக்கு எவ்வளவு முக்கியத்துவும் தந்துள்ளனர் என்பது தெளிவாகும்.
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் தான் இந்த பெண் அடிமை தனம். இந்த உலகின் மிக கொடிய இந்த காளானை முளையிலையே கிள்ளி எரிய மறந்து விட்டனர் நம் முன்னோர். இது நடுவில் வந்ததே. இது அறுத்தெடுக்கும் பொறுப்பு நம்முடையதே. இது களைய பட்டு கொண்டு இருக்கிறது இப்பொழுது. நம் நாட்டின் ஜனாதிபதி, நாடாளுமன்ற சபாநாயகர், ஆளும் ஐக்கிய முன்னேற்ற கூட்டணி தலைவி என்று நாட்டின் முக்கிய பொறுப்புகளில் இப்பொழுது பெண்கள் உள்ளனர்.
ஆனால் வேகமாக களைய வேண்டும் அதுவும் முழுமையாக. அதற்கு ஏற்றார் போல் 100 வது உலக மகளிர் தினமாக இன்று நமது ராஜ்யசபாவில், லோக்சபா மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதா தாக்கல் செய்யப்படுகின்றது. இதை எதிர்க்கும் கட்சிகள் தயவு செய்து இதை இப்பொழுது நிறைவேற்றி விட்டு பிறகு உள் ஒதுக்கீடு பற்றி அலசி ஆராயட்டும். இன்னொரு அரசியல் சட்ட திருத்தம் செய்வது என்பது ஒன்று பெரிய விஷயம் இல்லை. நம் இந்திய பெண்களுக்கு மகளிர் தின பரிசாக இதை தர வேண்டும்.

Saturday, March 6, 2010

இது கண்டுபிடிக்காமலே இருந்திருக்கலாமோ ?


தமிழ் பதிவுலகம், தமிழ் பத்திரிக்கையுலகம் மற்றும் தமிழ் தொலைக்காட்சிகள் கடந்த இரண்டு, முன்று தினங்களில் மிக முக்கியமாக ஒரு செய்தியை அலசி ஆராய்ந்து கொண்டுருக்கும் பொழுது எனக்கு ஏனோ இந்த இடுகை உங்களுடன் பகிர்ந்து கொள்ள தோன்றியது. சுட சுட அலசி ஆராயப்பட்டு கொண்டு இருக்கும் செய்தியுடன் தொடர்பு உண்டா என்பதை இந்த இடுகையை படித்து நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

நம் பதிவுலக நண்பர்கள் இந்த செய்தியை பயன்படுத்தி தொலைக்காட்சிகள் தங்கள் டீ.ஆர்.பி க்கும், பத்திரிகையுலகம் தங்கள் வியாபாரத்துக்கும் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டுகிறோம். ஆனால் நாமும் நம்முடைய வலைதளத்தின் டீ.ஆர்.பி உயர்வுக்கு பயன்படுத்துகிறோம் என்பதை மறுக்க முடியாது.

அவர்கள் செய்வது பொறுப்பற்ற செயல் என்று விமர்சிக்கும் நாம் அதை பற்றி பேசி அதை இன்னும் பிரபலப்படுத்த கூடாது என்பதே என் கருத்து. இந்த உலகை உலுக்கி கொண்டிருக்கும் பல பிரச்சினைகளுக்கு உங்கள் கருத்துக்கள் மற்றும் சிந்தனைகள் தேவைபடுகின்றன. கடந்த கால் நூற்றாண்டில் பல இயற்கை பேரழிவுகளை இந்த உலகம் கண்டுள்ளது.

கொதிக்கும் கோடைக் காலங்கள், கடல் மட்ட அதிகரிப்பு, மழை பொழிவு தன்மைகளிலான மாற்றங்கள், வறட்சி மற்றும் பூகம்பம், பேரழிவு ஆழிப்பேரலை இப்படி இந்த உலகம் எத்தனையோ சந்தித்து கொண்டு இருக்கிறது. இவை அனைத்துக்கும் மூலகாரணம் என்று பார்த்தால் உலக தட்ப வெப்ப நிலை மாற்றமே. அதற்கு வழிவகுத்து நம் மனிதர்களின் சுக போக வாழ்க்கைக்கு அஸ்திவாரமாக விளங்கும் தொழில் புரட்சியே ஆகும்.

இவைகளுக்கு எல்லாம் விதையாக இருந்த கண்டுபிடுப்புகளை நம் விஞ்ஞானிகள் கண்டுபிடிக்காமலே இருந்து இருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது. நம் பதிவுலகும் இப்பொழுது அலசி ஆராய்ந்து கொண்டு இருக்கும் நிகழ்வுகள் பற்றி தெரிந்திருக்க கூட வாய்ப்பு கிடைத்திருக்காது.

இதை பார்க்கும் பொழுது எப்பொழுதோ வலைபதிவில் படித்தது நியாபகம் வந்தது. "சல்லடையில் சல்லிக்கும்போது மாவு கீழே விழும், சக்கைகள் சல்லடையில் தங்கிவிடும். முறத்தில் புடைக்கும்போது சக்கை கீழே விழுந்து விடும். அரிசி முறத்தில் தங்கி விடும். நாம் சல்லடை போல் தேவையற்றவைகளை வைத்துக்கொள்ளாமல், முறம் போல் நல்லதை மட்டும் வைத்துக்கொண்டு தேவை இல்லாதவகைகளை விட்டு விட வேண்டும்"

நம் பதிவுலகின் சேவை பலவற்றில் தேவை. ஆகவே அதற்க்கு அனைவரும் முயற்சி செய்ய இந்த இடுகை முலம் கேட்டு கொள்கிறேன்.