Saturday, June 6, 2009

கொள்ளி.. கொள்ளி..

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.
ஆசைக்கு ஒரு பெண் - ஆஸ்திக்கு ஒரு ஆண் என்று நம் நாட்டில் பலர் சொல்வதுண்டு. என் குடும்பமும் அதற்கு சான்றாக அமைந்தது. குழந்தையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்பார்கள். அது எவ்வளவு உண்மை என்று அனுபவித்து உணர்ந்தோம் நானும் என் மனைவியும். எங்கள் குழந்தைகளின் குறும்புத்தனமான செயல்கள், வேடிக்கையான கேள்விகள், அமிழ்தமான பேச்சு, அழகான சிரிப்பு என்பது போன்ற எண்ணற்ற சொல்லில் அடங்கா சந்தோசங்களால் எங்கள் குடும்பம் ஆனந்த மழையில் நனைந்தது.
யார் கண் பட்டதோ, திடிரென வந்த சுனாமியாய், நடுங்க வைக்கும் பூகம்பமாய், நாங்கள் நனைந்த ஆனந்த மழையில் இடியாய் வந்தது என் மகன் மரணத்தோடு செய்து கொண்ட ஒப்பந்தம் . மிகவும் நெடிய தூண்கள் கொண்ட மதுரை திருமலை நாயக்கர் மஹால் இன்ப சுற்றுலா சென்ற நாங்கள் இப்பொழுது எங்கள் வீட்டின் தூண்களின் அரவணைப்பில் துன்பமாய்.
சென்னையில் இருந்து மதுரைக்கு காரில் எங்கள் பயணம். கேலிக்கும், விளையாட்டுக்கும் மற்றும் சந்தோஷத்துக்கும் பஞ்சம் இல்லா பயணம். எங்கள் குழந்தைகளின் சின்னஞ்சிறு வழக்குகளைத் தீர்க்கும் நாட்டாமையான என் மனைவி , என் குழந்தைகளை உசுப்பேற்றி விட்டு அமைதியாய் வண்டி ஓட்டும் எனக்கு பேச்சுத் துணையாய் முன் இருக்கையில்.
எமன் எருமையில் வருவான் என்பார்கள், எங்களை கொண்டு செல்ல லாரியில் வந்தானோ என்னவோ? எங்கள் எதிராக அந்த லாரி அவ்வளவு வேகமாக வந்து கொண்டு இருந்தது. பின்னால் சைரன் அடித்து கொண்டு போலீஸ் வண்டியும். எமனைக் கண்ட நான் எப்படியோ வண்டியை மண்ணில் விட்டு ஒரு ஓரமாக நிறுத்தினேன். தாறுமாறாக வந்த அந்த எம வாகனமும் தடுப்பில் முட்டி நின்றது.
அதை ஓட்டி வந்தவன் போலீசிடம் இருந்து தப்ப எங்கள் வாகனம் இருந்த திசை நோக்கி ஓடி வந்தான். அப்பொழுது நானும், என் மனைவியும் என்னவென்று பார்க்க கார் கதவை திறந்து வெளியே வந்தோம். எங்களை கண்டு எங்கள் மகனும் கார் பின் கதவைத் திறந்தான். ஓடி வந்த அந்த நபர் அதில் இடித்துக் கீழே சாய்ந்தான்.அவனைக் கண்டு எங்கள் மகன் பயந்து வெளியே வராமல் அப்படியே உட்கார்ந்து விட்டான். ஆனால் அந்த பாவியோ போலீஸ் வருவதற்குள் சுதாரித்து என் மகனை அவனிடம் இழுத்துக் கொண்டான்.
என் மகனின் கழுத்தில் கத்தியை வைத்து தன்னைப் பிடிக்க வந்த போலீசை மிரட்ட ஆரம்பித்தான். கதி கலங்கிப் போன நானும் என் மனைவியும் அவனிடம் எங்கள் மகனை விட்டுவிடும் படியும் அதற்கு மாற்றாக என்ன கேட்டாலும் தருவதாக கூறினோம். போலீசும் குழந்தையை விட்டு விடும் படி எச்சரிக்கை செய்தனர். அவன் எங்கள் வண்டி சாவி யைத் தரும் படியும் தான் அதில் செல்வதாகவும், போலீஸ் தன்னைப் பின் தொடரக் கூடாது என்பதற்காக அவர்களின் வண்டி சாவியையும் கேட்டான்.
நாங்கள் எங்கள் வண்டி சாவியைத் தந்தோம். அதற்கு பிறகு போலீஸ் கான்ஸ்டபிள் ஒருத்தர் வண்டி சாவியைக் கொடுக்க எங்கள் அருகில் வந்தார். அவன் வாங்க சென்ற பொழுது, யாரும் எதிர்ப்பார்க்காதது நடந்தது. அவன் பிடியில் இருந்த என் மகன் திடிரென ரத்த வாந்தி எடுத்தான். நானும், என் மனைவி மட்டுமின்றி அந்த லாரி ஓட்டி வந்த அந்த நபரும்(அவன் திருடனாக இல்லை கொலைகாரனாக இல்லை தீவிரவாதியாக கூட இருக்கலாம்) நிலை குலைந்தோம். அந்த சந்தர்ப்பத்தில் எங்கிருந்து வந்த தைரியமோ என் மகனை அவன் கையில் இருந்து பிடுங்கினேன், போலீஸ் அந்த நபரைப் பிடித்தது.
நாங்கள் எங்கள் மகனை எடுத்துக்கொண்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு விரைந்தோம். அவர்கள் அவனை பரிசோத்தித்து விட்டு அவனுக்கு புற்றுநோய் உள்ளது என்றும், அதிகம் நேரம் அழுத காரணத்தால் இப்பொழுது ரத்த வாந்தி எடுத்துள்ளதாக கூறினர். எமன் போலீஸ் துரத்தி வந்த அந்த நபர் இல்லை நான் தான். என் மகன் எப்பொழுதும் அப்பா பிள்ளை. அவன் அம்மாவிடம் உள்ளதை விட என்னிடம் அதிக நேரம் செலவிடுவான். அதுவே அவனை இந்த நிலைமைக்குத் தள்ளி விட்டது.
நான் தொடர் புகைவண்டி(Chain Smoker) விடுவதில் திறமைசாலி. அந்த ப் புகையை நிறைய சுவாசித்ததால்(Passive Smoking) இப்பொழுது அவனுக்கு இந்த நிலைமை. நாங்கள் சென்னை திரும்பி வந்தோம். முன்பு அவன் சிரிப்பில் இறைவனைக் கண்ட நான், இப்பொழுது குற்ற உணர்வில் அவன் முகத்தை நேரே பார்க்க தைரியம் இன்றி கூனிக் குறுகி உள்ளேன். நான் என் வாயில் சிகரெட்டுக்குத் தினமும் வைத்த கொள்ளி என் மகனுக்கு நானே கொள்ளி போடக்கூடும் என்ற நிலைக்கு தள்ளிவிட்டதை எண்ணி தினம் சாகிறேன் அவனுடன் சேர்ந்து நானும்.
என் மகன் போல் இவ்வுலகில் எந்த ஒரு குழந்தையும் பாதிக்கப் பட கூடாது. புகைப்பிடிப்பவர்கள் புகைப் பிடிப்பதை நிறுத்த முடியா விட்டாலும், உங்கள் விட்டினுள் அல்லது புகைப் பிடிக்காத மற்றவர்களுடன் இருக்கும் பொழுது தயவு செய்து புகைப் பிடிக்காதீர்கள்.மற்றவர் துன்பத்திற்கு காரணகர்த்தா ஆகி விடாதீர்கள்.

'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது

3 comments:

Post a Comment