Saturday, May 9, 2009

அம்மா உன்னை வணங்குகிறேன்.

தாயிற் சிறந்த கோவிலுமில்லை. அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்

நம்மைப் பல மாதங்கள் தன் கருப்பையில் தாங்கி, நம்மை ஈன்றெடுக்கும் அன்னை பற்றிய இடுகை தான் என் எழுத்துக்களின் முதல் மைல்கல் என நான் கருதுகிறேன். உற்றார் மற்றும் உறவினர்கள் புதிதாக தங்கள் வாழ்க்கையில் வந்துள்ள சிறு உயிரை கண்டு பேரானந்தம் கொள்ளுவதைப் போல் இந்த இடுகையைப் படித்து மகிழ்ச்சி கொள்ளவீர்கள் என்று நம்புகிறேன். அன்னையர் தினமான இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்வது இன்னும் அதிக படுத்தும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள். அவளைப் பற்றி எழுத பேனா மை பத்தாது, காகிதங்கள் பத்தாது, வார்த்தைகளும் பத்தாது. எதோ கடுகு அளவு பகிர்ந்துக் கொள்ள உள்ளேன்.

குழந்தையை சுமக்கும் அந்த பேறு காலத்தில் அவள் படும் அவஸ்தைகள் தான் எத்தனை எத்தனை? பிரசவ நேரத்தில் மறுபிறப்பு அல்லவா எடுக்கின்றாள்? தன் உயிர் போனாலும் தன் குழந்தை இந்த உலகத்தில் ஜனிக்க வேண்டும் என்று விரும்பும் ஒரே உயிர் அவள் தானே? பிள்ளை முகம் கண்டவுடன் அனைத்தையும் மறந்து அணைத்துக் கொள்ளும் அன்பின் வடிவம். ஒரு பெண் தாயானவுடன் தான் முழு பெண்மணி ஆகிறாள் என்பார்கள், ஆனால் ஒரு பெண் தாயாகும் பொழுது இறைவனையும் தாண்டி ஒரு படி மேலே செல்கிறாள் என்பது என் கருத்து.

தாய்மொழி பேசத்தெரியாத தருணத்தில், நம் மழலை மொழி அறிந்தவள் அவளே. நடக்கத்தெரியாத தருணத்தில், நம்மை சுமந்து செல்லும் வாகனம் அவளே. எதுவும் தெரியாத தருணத்தில், நமக்கு கற்று கொடுக்கும் முதல் ஆசானும் அவளே. உறவே தெரியாத தருணத்தில், நம் உறவுகளை அறிமுக படுத்தும் முதல் உறவும் அவளே. நம் வாழ்க்கையின் ஆணி வேரும் அவளே. நம் விழியோரம் சிறு துளி நீர் வழிந்தால் அவள் நெஞ்சம் பொருத்ததில்லையே. அம்மா எனப்படுபவள் தியாகத்தின் திருவுருவம்.

எதுவும் அருகில் உள்ள பொழுது அதன் அருமை தெரியாது, விலகி இருக்கும் பொழுது தான் நமக்கு தெரியும். எனது தாயின் ஸ்பரிசத்தை அருகில் இருந்து அனுபவிக்க முடியவில்லை என்றாலும், எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாத தன் பிள்ளைகளின் நலனை மட்டுமே நினைக்கும் ஜீவன் அல்லவா அவள். நம் உருவம் தெரியாமல் இருக்கும் பொழுது நம்மை நேசிக்க ஆரம்பிக்கும் அவள் தன் உயிர் போகும் வரை அந்த பாசம், அன்பு இம்மி அளவும் குறைவதில்லை. நம் உயிர் உள்ளவரை அவளின் நினைவுகள் நம் நெஞ்சில் நிறைந்திருக்கும்.

அம்மா என்ற அந்த முன்று எழுத்து மந்திரம் தரும் சுகம் மற்ற எதனால் தர இயலும்? பாசப் பிணைப்புகளிலேயே மிக மிக வலுவான பிணைப்பு ஒரு தாய்க்கும் குழந்தைக்கும் இடையிலான பிணைப்பாகும். நாம் நம் தாய்மேல் இருக்கும் பாசத்தைவிட, அவள் நம் மேல் வைத்திருக்கும் பாசம் பல மடங்கு அதிகமானது, பலமானது. அவள் எதை இழந்தாலும் தன் குழந்தைகளை மட்டும் இழக்கச் சம்மதிக்க மாட்டாள். நமக்கு குழந்தை பிறந்தாலும், நாம் எப்பொழுதும் அவளுக்கு குழந்தையே.

"எவன் ஒருவன் தாய் தந்தையருக்கு தேவையானவற்றை கொடுத்து மனம் நோகாமல் வைத்திருக்கனோ அவன் தினம் தினம் கங்கையில் குளித்தற்கு சமம். ஆக தினம் தினம் பாவத்தை கழுவி புனியத்தை அடைந்தவன். ஆகையால் இந்த உலகத்தில் தாய் தந்தையருக்கு நிகரான கடவுள் உலகில் இல்லை. தாய் தந்தையாரை கவனிக்காமல் எந்த கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்தாலும் என்ன தானம் செய்தாலும் புண்ணியம் கிடைக்காது" என்கிறது இந்து மதம். இதே போல் கிறிஸ்தவம், இஸ்லாம் மற்றும் இதர மதங்களும் இதையே போதிக்கின்றனர். இந்த அவசர உலகின் உங்கள் வாழ்க்கை தூண்களான உங்கள் பெற்றோரை போற்றி வணங்கா விட்டாலும், அவர்கள் மனம் நோகாமல் நடுந்து கொள்ளுங்கள். அவர்கள் உங்களிடம் செலுத்திய அன்பில் ஒரு சிறு பகுதியாவது திருப்பி கொடுங்கள்.

இன்னொரு ஜன்மம் என்று ஒன்று உனக்கு இருப்பின், அதில் நீ எனக்கு மகளாய் பிறக்க வேண்டும், நீ எனக்கு கொடுத்த, கொடுத்துக் கொண்டு இருக்கும், கொடுக்க போகும் அனைத்துக்கும் ஓரளவாவது திருப்பி தர வேண்டும் நான். இன்னொரு ஜன்மம் என்று ஒன்று எனக்கு இருப்பின், மீண்டும் உன் கருவறையில் உயிர் பெற வேண்டும். என் அன்னைப் போன்று இந்த உலகில் வாழும் அனைத்து அம்மாகளுக்கும் இந்த இடுகை சமர்ப்பணம்.

5 comments:

தமிழ் said...

வாழ்த்துகள்

தீப்பெட்டி said...

நல்ல இடுகை...

அன்னையர் தின வாழ்த்துகள்

ப்ரியமுடன் வசந்த் said...

நல்லாயிருக்கு..........

Durairaj said...

நல்ல பதிவு...வாழ்த்துக்கள்... கலக்கற சந்துரு!!!!!!!!!!!

nila said...

தன் பசி தன் வலி
தன் சுகம் தன் துக்கம்
எல்லாவற்றையும் நமக்காக
மறந்துவிட்டவள்...
அவளுக்காக நாம் செய்வது
அவளையே மறப்பது.....
தாய்மையை கொண்டாட
இந்த ஒரு நாள் போதாது...
இந்த உலகில்
ஒரு உயிர் ஜனிக்க காரணமாயிருக்கும்
ஒவ்வொருவரும்
நித்தமும் உணர்ந்து போற்ற வேண்டிய
ஓர் உன்னதம்

Post a Comment