Monday, May 10, 2010

கல்வி கட்டணத்தை முறைப்படுத்தும் சட்டம் வெற்றி அடையுமா?

பள்ளிகளில் கல்வி கட்டணத்தை முறைப்படுத்தும் சட்டம் கடந்த ஆண்டு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கே.கோவிந்தராஜன் தலைமையில் சுயநிதி பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு ஆய்வு நடத்தி, நடப்பாண்டுக்கான புதிய கல்வி கட்டணத்தை நிர்ணயித்துள்ளது.
இத்தகைய சட்டம் கொண்டு வந்தமைக்கு முதலில் என் பாராட்டுகளையும், மகிழ்ச்சியும் பதிவுசெய்கிறேன். இந்த கல்வி கட்டணத்தை முறைப்படுத்தும் சட்டம் வெற்றி அடையுமா? ஆனால் இந்த சட்டத்தை அமல்படுத்துவதில் நடைமுறை சிக்கல்கள், எதிர்ப்புகள் ஏராளம் என்பது அனைவரும் அறிவோம். பணம் படைத்த பள்ளி நிறுவன முதலைகள் பல இதை நடைமுறை படுத்துவதை தடுக்க தங்கள் பணத்தை பாதாளம் வரை செலவளிப்பர். வழக்கு, வாய்தா என்று நிச்சியம் இழுத்தடிப்பர். முன்பு பலர் மக்களுக்கு சேவை செய்ய கல்வி நிறுவனங்களை தொடங்கினர், இன்று பண பேராசை பிடித்து கல்வி நிறுவனங்களை தொடங்குவோர் எண்ணிக்கை தான் அதிகம். இதை எல்லாத்தையும் விட சட்டம் இயற்றும் நம் அரசியல்வாதிகள் பலர் கல்வி நிறுவன உரிமையாளர்கள் தான்.
இலவச தொலைகாட்சி பெட்டிகள், இலவச வீடு மனை, இலவச விவசாய நிலம் என்று தருவதில் பல லட்சம் கோடி செலவு செய்கிறது நம் அரசு, இது மக்களை சோம்பேறிகளாக்கி, அவர்கள் மூளை மழுங்கச் செய்யும். இதை விடுத்து அவர்களாகவே தங்களுக்கு தேவையானதை வாங்குவதற்கான மூலாதாரத்தை இலவசம் ஆக்க வேண்டும். அதில் முதலாவது கல்வி பொதுவுடமையாக்கி, அனைவர்க்கும் கிடைக்கச் செய்ய வேண்டும். இதை நிச்சயம் சாத்தியமே. வளர்ந்த நாடுகளிலும் இது சாத்தியம் ஆகும் பொழுது நம் நாட்டில் ஏன் முடியாது?
ஒருவேளை இதில் தனியார் பங்களிப்பு இருந்தால் தான் தரம் நன்றாக இருக்கும் என்று எண்ணும் பச்சத்தில், இப்பொழுது அமலாக்க முயலும் சட்டத்தில் மேலும் ஒரு திருத்தம் கொண்டு வந்து, அரசே பெற்றோரிடம் இருந்த கல்வி கட்டணம் வசூலிக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும். அரசு மூலம் மட்டுமே தனியார் பள்ளிகள் கட்டணம் வசூல் செய்ய முடியும்படி ஆக்கவேண்டும். இப்பொழுது உள்ள தொழில்நுட்பங்கள் முலம் இது சாத்தியமே. இதன் முலம் நிச்சியம் கல்வி வியாபாரம் ஆவதை தடுக்க முடியும்.